தானே ரெயில் நிலையத்தில் பெண்ணுக்கு பிரசவம் ஆண் குழந்தை பெற்றெடுத்தார்

தானே மாவட்டம் பத்லாப்பூர் (மேற்கு) பகுதியை சேர்ந்தவர் சந்தேஷ் (வயது 30). இவரது மனைவி மீனாக்ஷி (25).

Update: 2017-06-21 22:15 GMT

தானே,

தானே மாவட்டம் பத்லாப்பூர் (மேற்கு) பகுதியை சேர்ந்தவர் சந்தேஷ் (வயது 30). இவரது மனைவி மீனாக்ஷி (25). இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். சந்தேஷ் தானேயில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், மீனாக்ஷி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், நேற்று மாலை சந்தேசை செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு வயிறு வலிப்பதாக கூறினார்.

பின்னர், சந்தேஷ் கூறியபடி பத்லாப்பூரில் இருந்து தானே நோக்கி மின்சார ரெயிலில் பயணித்தார். மனைவியின் வருகைக்காக சந்தேஷ் தானே ரெயில் நிலையத்தில் பதற்றத்துடன் காத்திருந்தார். இந்த நிலையில், ரெயிலை விட்டு இறங்கியதும் மீனாக்ஷிக்கு பிரசவ வலி அதிகமாகி பிளாட்பாரத்திலேயே சுருண்டு விழுந்தார். வலியால் துடித்தார். உடனடியாக அங்கு நின்ற பெண்கள், அவரை சூழ்ந்து கொண்டு, பிரசவம் பார்த்தனர்.

இதன் பலனாக அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனிடையே, சந்தேசும் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர், டாக்டர்களும், ரெயில்வே போலீசாரும் வந்து தாய்– சேய் இருவரையும் மீட்டு தானே சிவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்