30 இருசக்கர வாகனங்களுக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை

நாகர்கோவில் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 30 இருசக்கர வாகனங்களுக்கு ஒரே நாளில் ரூ.23 ஆயிரம் அபராதம் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை

Update: 2017-08-07 22:30 GMT
நாகர்கோவில்,


நாகர்கோவில் நகரில் சாலையோரங்களில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடைகள் மற்றும் “நோ பார்க்கிங்“ பகுதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி வருவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் அருள் ஜாண் ஒய்ஸ்லின்ராஜ் மற்றும் போலீசார் நேற்று மாலை நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செல்லும் சாலை, மணிமேடை சந்திப்பில் இருந்து அண்ணா பஸ் நிலையம் செல்லும் சாலை, வேப்பமூடு சந்திப்பில் இருந்து கோர்ட்டு ரோடு ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த பகுதிகளில் உள்ள நடைமேடைகளிலும், “நோ பார்க்கிங்“ என்ற அறிவிப்பு பலகை வைத்திருந்த பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்பு வாகனத்தில் ஏற்றி கணேசபுரம் பகுதியில் உள்ள போக்குவரத்து ஒழுங்குப்பிரிவுக்கு கொண்டு சென்றனர். பின்னர் போலீசார் ஒவ்வொரு வாகனத்தின் உரிமையாளருக்கும் “நோ பார்க்கிங்“ பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தியதற்காக ரூ.600–ம், போலீஸ் மீட்பு வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றதற்கான கட்டணமாக ரூ.150–ம், ஏற்றி, இறக்கிய வகையில் உதவியாளர் கட்டணமாக ரூ.10–ம் ஆக மொத்தம் ரூ.760 வசூல் செய்தனர். இவ்வாறு மொத்தம் 30 வாகனங்களுக்கு ரூ.22,800 ஒரே நாளில் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் இனிமேல் இதுபோன்று வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடாது என்ற அறிவுரைகளும் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை நேற்று நாகர்கோவில் நகரப் பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்