அரசு மாணவிகள் விடுதியில் அரைக்கம்பத்தில் பறந்த தேசிய கொடி
வாணியம்பாடி நியுடவுன் பகுதியில் அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. இதில் 80–க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
வாணியம்பாடி,
இந்தநிலையில் நேற்று முன்தினம் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றிய பின்னர் மாணவிகள் விடுப்பில் சென்று விட்டனர். நேற்று மதியம் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் விடுதி பூட்டப்பட்டிருந்த நிலையில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறந்ததை பார்த்து வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வருவாய்த் துறையினர் விரைந்து வந்து விடுதி பூட்டப்பட்டு இருந்ததால் மதில் சுவர் மீது ஏறி விடுதிக்குள் இறங்கி அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்த தேசிய கொடியை அவிழ்த்து எடுத்து சென்றனர்.
தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.