ராஜபாளையம் 3-வது திருமணம் செய்வதற்காக பச்சிளங்குழந்தையை கொன்ற தாய்

3-வது திருமணம் செய்து கொள்வதற்காக பெற்றெடுத்த பச்சிளங்குழந்தையை கொலை செய்ததாக இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவரது தாயாரும் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-08-16 23:30 GMT
ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள முக்தாநதி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் ராமலட்சுமி( வயது22). பி.ஏ. படித்த இவர் படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளார். இவருக்கும் ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கில்லிகுட்டான் என்பவரது மகனான கருப்பசாமிக்கும் (22) காதல் மலர்ந்துள்ளது. கருப்பசாமி பி.எட் படித்து முடித்துள்ள நிலையில் ராமலட்சுமியின் தாய்மாமா தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். அடிக்கடி ராமலட்சுமி அங்கு வரும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அவர் கர்ப்பமாகி உள்ளார்.

இந்த நிலையில் ராமலட்சுமிக்கு நெல்லை மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்த கோபி என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணமான ஒரு வாரத்திற்குள் ராமலட்சுமிக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே கணவர் வீட்டார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்தபோது ராமலட்சுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த கணவர் வீட்டார் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தியதில் காதல் விஷயம் பகிரங்கமானது. இதனால் ராமலட்சுமியுடன் குடும்பம் நடத்த மறுத்த கோபி, மனைவியை தாயார் வீட்டிற்கு அனுப்பி விட்டார்.

இதன் பின்பு காதலன் கருப்பசாமி, ராமலட்சுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் முக்தாநதி கிராமத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த மாதம் (ஜூலை) 12-ந்தேதி ராமலட்சுமிக்கு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கருப்பசாமி மட்டும் ஒருமுறை பார்க்க வந்தார். அதன் பிறகு, அவரும் அவரது குடும்பத்தினரும் குழந்தையை பார்க்க வரவில்லை. பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை.

இதனால் ராமலட்சுமி அதிர்ச்சியடைந்தார். இந்த நிலையில் ராமலட்சுமியின் தாயார் முத்து தனது மகளை 3-வதாக திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்தார். இதற்கு ராமலட்சுமியும் உடன்பட்டார். ஆனால் அதற்கு குழந்தை இடையூறாக இருப்பதாக எண்ணினர். இதனால் பச்சிளம் குழந்தையை கொன்றுவிட தீர்மானித்துள்ளனர். நேற்று முன்தினம் குழந்தையின் மூக்கை மூச்சுவிட முடியாமல் அமுக்கி ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளனர். இறந்த குழந்தையை கருப்பசாமியின் சொந்த ஊரான தெற்கு வெங்காநல்லூரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு சென்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சேலையால் தொட்டில் கட்டி போட்டுச் சென்றனர். சிறிது நேரத்தில் கருப்பசாமியின் குடும்பத்தார் வீடு திரும்பியுள்ளனர். தொட்டிலில் இறந்த நிலையில் குழந்தை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பக்கத்து வீடுகளில் விசாரித்ததில் ராமலட்சுமியும், முத்துவும் வந்து சென்றதாக கூறினார்கள்.

இதுகுறித்து தளவாய்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோது தாயும் மகளும் இந்த படுபாதக செயலை செய்திருப்பது தெரிய வந்தது. ராமலட்சுமி மற்றும் முத்துவை போலீசார் நேற்று கைது செய்தார்கள்.

மேலும் செய்திகள்