மகனை கழுத்தை நெரித்து கொன்ற தாய் கைது மனைவியை சித்ரவதை செய்ததால் ஆத்திரம்

குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்த மகனை, அவரது தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் மான்கூர்டில் நடந்துள்ளது.

Update: 2017-08-17 22:55 GMT
மும்பை, 

மும்பை மான்கூர்டு அம்பேத்கர் சாலில் வசித்து வருபவர் அன்வாரி(வயது45). இவரது மகன் நதீம் நைம்(25). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் அலகாபாத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்தநிலையில் திருமணத்திற்கு பிறகு நதீம் நைம் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார்.

இதனால் விரக்தி அடைந்த மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் சமீபத்தில் அன்வாரி, மருமகளை சமாதானம் செய்துவீட்டிற்கு திரும்ப அழைத்து வந்தார்.

கழுத்தை நெரித்து கொலை

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல நதீம் நைம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை அடிக்க முயன்றார். அப்போது அன்வாரி மருமகளை காப்பாற்றி பக்கத்துவீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த நதீம் நைம், தாய் அன்வாரியை சரமாரியாக தாக்கினார். இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் குடிபோதையில் தூங்கிவிட்டார்.

இந்தநிலையில் மகன் குடித்துவிட்டு வந்து மருமகளை தினமும் சித்ரவதை செய்வதால் விரக்தி அடைந்த அன்வாரி, போதையில் தூங்கிக்கொண்டிருந்த நதீம் நைமை மகன் என்றும் பாராமல் துப்பட்டவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

மான்கூர்டில் பரபரப்பு

இந்தநிலையில் மறுநாள் அதிகாலை பக்கத்துவீட்டில் இருந்த மருமகள் திரும்பி வந்தார். அப்போது அன்வாரி கதறி அழுது கொண்டு இருந்தார். இதுகுறித்து விசாரித்த போது அவர், மகனை கொலை செய்துவிட்டதை கூறினார். இந்தநிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார் நதீம் நைமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது தாய் அன்வாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகளை சித்ரவதை செய்த மகனை தாயே கொலை செய்த சம்பவம் மான்கூர்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்