சென்னை வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ஆன்லைன் சூதாட்டத்தால் பல லட்சம் ரூபாய் இழந்தவர்

ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாயை இழந்த சென்னை வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-08-21 22:30 GMT

ராயபுரம்,

சென்னை தண்டையார் பேட்டை சோலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் மகாவீர். இவரது மகன் ரஞ்சித் (வயது 28). இவர், சிந்தாதிரிப்பேட்டை ரிச் தெருவில் மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் தனது வீட்டில் உள்ள அறையில், ரஞ்சித் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தண்டையார்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆன்லைன் சூதாட்டம்

மேலும், ரஞ்சித் எழுதி வைத்த ஒரு உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ‘தாய், தந்தைக்கு நான் இதுவரை எந்த உதவியும் செய்ததில்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை. தங்கைக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுங்கள்’ என எழுதி இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், தடைசெய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தில், ரஞ்சித் பல லட்சம் ரூபாயை இழந்ததாகவும், அதில் அவர் கடனாளி ஆனதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்