ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் மணமகளை சகோதரிகள் தாக்கியதால் பரபரப்பு
ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது. பேச்சுவார்த்தையின்போது மணமகளை சகோதரிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரன்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் சூர்யா (வயது 21). வெல்டிங் பட்டறை தொழிலாளி. ஈரோடு வளையக்காரவீதியை சேர்ந்த பாபுவின் மகள் சகிராபானு (21). இவரும், சூர்யாவும் பள்ளிக்கூடத்தில் ஒரே வகுப்பில் படித்தபோது பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இவர்களுடைய காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சகிராபானுவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை தேடியதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் சூர்யாவும், சகிராபானுவும் வீட்டைவிட்டு வெளியேறி நேற்று காலை பவானி கூடுதுறையில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தது. இருதரப்பு பெற்றோர்களையும் போலீசார் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இதைத்தொடர்ந்து சகிராபானுவின் பெற்றோர், சகோதரிகள் மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.
அங்கு திருமணக்கோலத்தில் அமர்ந்து இருந்த மணமகள் சகிராபானுவை அவருடைய அக்காளும், தங்கையும் சேர்ந்து தாக்கினார்கள். இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மகளிர் போலீசார் விரைந்து சென்று சகிராபானுவின் சகோதரிகளை விலக்கி விட்டனர். அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் எச்சரித்தனர். மேலும், போலீசார் காதல்ஜோடியின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.