திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்படுகிறது. இந்த இடங்களை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Update: 2017-09-05 22:45 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கும், மாதந்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் கிரிவலம் வருவதற்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவண்ணாமலை நகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் நேற்று திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட ஈசான்ய மைதானம், திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், திருவண்ணாமலை திருக்கோவிலூர் புறவழிச் சாலை, காவலர் குடியிருப்பு அருகே உள்ள அரசு இடம் ஆகிய இடங்களை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, நகராட்சி ஆணையாளர் செ.பாரிஜாதம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

உயர்மட்ட பாலம்

இதற்கிடையில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, திருவண்ணாமலை ரெயில் நிலையம் அருகில் திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் ரெயில்வே கேட்டில் அமைக்கப்பட உள்ள உயர்மட்ட பாலம் குறித்தும் நேரில் ஆய்வு செய்தார். மேலும் நகராட்சி மத்திய பஸ் நிலையத்தை பார்வையிட்டார்.

பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செஞ்சிலுவை சங்கம், தேசிய கிராமப்புற சுகாதாரப் பணி மூலமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் இலவச தாய் சேய் பாதுகாப்பு வாகனம் மற்றும் இலவச அமரர் ஊர்தி வாகனங்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட செஞ்சிலுவை சங்கத் தலைவர் இந்திரராஜன் உடனிருந்தார். 

மேலும் செய்திகள்