திருவொற்றியூர் அருகே ரூ.50 லட்சம் கேட்டு மெட்ரோ ரெயில் அதிகாரி மகன் கடத்தலா?

திருவொற்றியூர் அருகே ரூ.50 லட்சம் கேட்டு மெட்ரோ ரெயில் அதிகாரி மகன் கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2017-09-12 22:30 GMT
திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர், ஜோதி நகர் 8-வது தெருவில் வசித்துவருபவர் அஜெய்குமார். இவர் திருவொற்றியூர் மெட்ரோ ரெயில் பணியில் மேற்பார்வையாளராக உள்ளார். இவரது மகன் அவினாஸ்பூசன் (வயது28). ஐ.டி.ஐ. படித்துவிட்டு வேலை தேடிவந்தார். கடந்த 7-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அஜெய்குமார் சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில், தனது மகனை கடந்த 3 நாட்களாக காணவில்லை என்று 10-ந்தேதி புகார் செய்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அஜெய்குமாரின் செல்போனில் தொடர்புகொண்ட மர்மநபர் ‘உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம். அவனை விடவேண்டும் என்றால் ரூ.50 லட்சம் தரவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

கடத்தலா? நாடகமா?

இதனால் பயந்துபோன அஜெய்குமார் இதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் கலைச்செல்வம், எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் தினகரன் ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மர்மநபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்தபோது முதலில் பெங்களூருவிலும், பின்னர் அருகில் உள்ள மணலி சடையங்குப்பம் பகுதியிலும் சிக்னல் காட்டியுள்ளது. சடையங்குப்பம் பகுதியில் ஏராளமான குடோன்கள் உள்ளன. அங்கு ஏதாவது ஒரு குடோனில் அடைத்து வைக்கப்பட்டுள்ளாரா? என்று போலீசார் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் அவினாஸ்பூசன் உண்மையிலேயே கடத்தப்பட்டாரா? அல்லது தந்தையிடம் பணம் பறிப்பதற்காக நண்பர்களுடன் சேர்ந்து நாடகமாடுகிறாரா? என்ற கோணத்தில் போலீசார் அவருடைய நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்