மாநகராட்சி அனுமதி பெறாத விளம்பர வாகனங்கள் பறிமுதல் அனைத்து மண்டலங்களிலும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னையில், மாநகராட்சி அனுமதி பெறாமல் இயங்கி வந்த விளம்பர வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையை அனைத்து மண்டலங்களிலும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Update: 2017-09-12 23:30 GMT
சென்னை,

சென்னையில் விளம்பர போர்டுகள் வைப்பதற்கும், சுவர் விளம்பரம் செய்வதற்கும் மாநகராட்சி மற்றும் போலீசாரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் சமீபகாலமாக சென்னை நகரில் அனுமதி இல்லாமல் விளம்பரங்கள் வைக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர் புகார்கள் எழுந்து வந்தது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது.

வாகனங்கள் பறிமுதல்

சென்னை அண்ணாநகரில் தனியார் விமான நிறுவனம், நிதி நிறுவனம், மருத்துவமனை யின் விளம்பர பதாகைகளை ஏந்திக்கொண்டு சில வாகனங் கள் வீதி வீதியாக வலம் வந்து கொண்டிருப்பதாக அண்ணாநகர் மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு (மண்டலம்-8) தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்று, அந்த விளம்பர வாகனங்களை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது முறையான அனுமதி இல்லாமல் விளம்பரங்கள் அடங்கிய வாகனங் களை இயக்கியதாக அதன் டிரைவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மண்டல அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டன. நேற்று 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உத்தரவு

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

அனுமதி இல்லாமல் விளம்பரங்களை கையாளுவது குற்றமாகும். இதன்மூலம் தகுதியற்ற விளம்பரங்கள் பிரபலமாகவும் வாய்ப்புள்ளது. இந்த நடவடிக்கையை முதன்முதலாக அண்ணாநகர் மண்டலம் மேற்கொண்டு இருக்கிறது. இதனை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களும் பின்பற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற வாகனங்கள் வலம் வருவது பற்றி பொதுமக்களும் புகார் தெரிவிக்கலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி தயாராகவே உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர். 

மேலும் செய்திகள்