குப்பைகளை அகற்ற கோரி நகரசபை அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை வியாபாரிகள் கடையடைப்பு

குளச்சலில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்ற கோரி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-10-11 23:00 GMT
குளச்சல்,

குளச்சல் நகரசபையில் 24 வார்டுகள் உள்ளன. இங்கு ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். குளச்சல் நகரசபை சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் களிமார் உப்பளம் பகுதியில் கொட்டப்பட்டது. இதற்காக அங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வந்தது.

நாளடைவில் அங்கு கொட்டப்பட்ட குப்பைகள் மலைபோல குவிந்ததால், அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உருவானதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு குப்பைகள் கொட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், குப்பை கொட்ட வந்த நகரசபை வாகனங்களும் சிறைபிடிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து குளச்சல் நகரில் சேரும் குப்பைகளை அகற்றமுடியாததால் நகரில் குப்பைகள் மலைபோல தேங்கியது. இதனால் குப்பைகளை அகற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற தொடங்கின.

இந்தநிலையில் குளச்சல் நகரில் தேங்கி உள்ள குப்பைகளை உடனே அகற்ற கோரி குளச்சல் அனைத்து அமைப்புகளின் போராட்டகுழு, அரசியல் கட்சிகள் என்று பல்வேறு தரப்பினரும் நேற்று போராட்டத்தில் குதித்தனர். இதைத்தொடர்ந்து குளச்சல் நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதற்கு போராட்டக்குழு தலைவர் சதீஷ் பாரதி தலைமை தாங்கினார்.

இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், குளச்சல் நகரசபை முன்னாள் தலைவர் நசீர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முருகேசன், வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகர், செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் சஜிவ், முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் பெண்கள் உள்பட திரளானவர்கள் திரண்டு கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.  

குளச்சல் நகரசபை பகுதியில் தேங்கி உள்ள குப்பைகளை உடனே அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று அவர்கள் கூறியதால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

மேலும், இந்த முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று குளச்சல் நகரசபை பகுதிகளில் உள்ள கடைகளை வியாபாரிகள் அடைத்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

போராட்டத்தையொட்டி, குளச்சல் நகரசபை அலுவலகம் முன் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் நகரசபை அலுவலக வாசலை பூட்டி யாரும் உள்ளே அத்துமீறி நுழையாதபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து குளச்சல் நகராட்சி பொறியாளர் சுரேஷ், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் குளச்சல் உப்பளம் பகுதியில் ஏற்கனவே கொட்டிவந்த குப்பைகள், திடக்கழிவு மேலாண்மை கிடங்கில்  கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அதைத்தொடர்ந்து நகராட்சி வாகனங்களில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள் போலீஸ் பாதுகாப்புடன்  திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கொட்டப்பட்டது. இதை அறிந்ததும் நகரசபை முன் திரண்டு இருந்தவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்