இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. பேச்சு

இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. பேசினார்.

Update: 2017-10-28 21:00 GMT
சங்கரன்கோவில்,

இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. பேசினார்.

பொதுக்கூட்டம்

சங்கரன்கோவில் வடக்கு ரதவீதி எம்.ஜி.ஆர். திடலில் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க அம்மா அணி சார்பில் அ.தி.மு.க 46-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் மாரியப்பன், இணை செயலாளர் தவுலத், துணை செயலாளர்கள் மூர்த்தி, சுமதி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சங்கரசுப்பிரமணியன் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர்கள் கல்லூர் வேலாயுதம், ஆர்.பி.ஆதித்தன், மாநில மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த் எம்.பி, ஈரோடு துரைச்சாமி உள்ளிட்ட பலர் பேசினர்.

கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

ஜெயலலிதாவின் எக்கு கோட்டை

சங்கரன்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தை பார்க்கும்போது பொதுமக்களும், தொண்டர்களும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. மேலும் சங்கரன்கோவில் தொகுதி ஜெயலலிதாவின் எக்கு கோட்டை. காவல்துறையினரை வைத்து மிரட்டி பார்த்தும் எங்களிடம் இருந்த 18 எம்.எல்.ஏ.க்களும் தினகரன் பக்கம் தான் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சியை அமைத்து கொடுத்தவர் சசிகலா. அவருக்கு துரோகம் செய்து விட்டு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு காரணமான ஓ.பி.எஸ். உடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்கிறார்கள். உலகில் துரோகம் என்றும் வென்றதாக சரித்திரம் கிடையாது. இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் முருகையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்