குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

தொட்டியம் அருகே குடிநீர்் கேட்டு ஆணைக்கல்பட்டி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-10-28 23:00 GMT
தொட்டியம்,

தொட்டியம் அருகே உள்ள நாகையநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஆணைக்கல்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்கள் குடிநீர் எடுத்து வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தொட்டியம்-காட்டுப்புத்தூர் சாலையில் ஆணைக்கல்பட்டி பஸ் நிறுத்தம் அருகே காலிக்குடங்களுடன் கூடினர். பின்னர் அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த தொட்டியம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரேவதி, தாசில்தார் கிருஷ்ணகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறினர். அதனை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் காரணமாக தொட்டியம்-காட்டுப்புத்தூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்