குழந்தை திருமணம்-கருக்கலைப்பு விகிதத்தை குறைக்க பெண்கள் முன்வர வேண்டும் அதிகாரி வேண்டுகோள்

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம்-கருக்கலைப்பு விகிதத்தை குறைக்க பெண்கள் முன்வர வேண்டும் திட்ட அதிகாரி வேண்டுகோள்

Update: 2017-11-12 22:45 GMT
பெரம்பலூர்,

தமிழ்நாடு தாய்சேய் நல பாதுகாப்பிற்கான இணையம், தமிழ்நாடு தன்னார்வ நலக்குழுமம், யுனிசெப், தாய்சேய் ஊட்டச்சத்தின் அவசியம் மற்றும் தற்போதைய நிலை குறித்து பெரம்பலூரில் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கம் புதிய பஸ்நிலையம் எதிரே உள்ள தனியார் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு தன்னார்வ நலக்குழும அமைப்பாளர் மற்றும் தனியார் அறக்கட்டளை இயக்குனர் முகமது உசேன் வரவேற்றார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பெரம்பலூர் மாவட்ட திட்ட அதிகாரி பூங்கொடி பயிலரங்கத்தை தொடங்கி வைத்து பேசுகையில், இம்மாவட்டத்தில் குழந்தை திருமணம் மற்றும் கருக்கலைப்பு விகிதம் அதிகமாக உள்ளதை குறைக்கபெண்கள் முன்வர வேண்டும் என்று கூறினார். அதை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நலப்பணிகள் இயக்க மாவட்ட தாய் சேய் நல அலுவலர் மகேஸ்வரி பேசுகையில், கருவுற்ற தாய்மார்கள் ஊட்டச்சத்துமிக்க உணவை உட்கொண்டால் பிரசவத்தின்போது சிசு இறப்பு விகிதத்தை குறைக்கலாம் என்று தெரிவித்தார். இதில் பொது சுகாதாரம் மற்றும் நலப்பணிகள் இயக்கம் மாவட்ட நலக்கல்வியாளர் குணசேகரன், ஊட்டச்சத்து குறைபாட்டின் தற்போதிய நிலை குறித்தும், ஓய்வுபெற்ற இணை இயக்குனர் டாக்டர் குணகோமதி பேறுகால பிரச்சினைகள் குறித்தும், தமிழ்நாடு தன்னார்வ நலக்குழும திட்ட அலுவலர் மணிகண்டன் பச்சிளம் குழந்தைக்கு 10 மாதம் வரை தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்தும், தாய்சேய் நலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்கள். இதில் கிழக்கு மண்டல அமைப்பாளர் பாத்திமராஜ், தனியார் பவுண்டேசன் மண்டல அலுவலர் கார்த்திக், தனியார் அறக்கட்டளையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் மதுபாலன், தமிழ்நாடு தன்னார்வ நலக்குழும உறுப்பினர் சிவபிரகாசம், ஸ்ரீநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வசந்தி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்