குடிநீர் வழங்கக்கோரி துறையூரில் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்கக்கோரி துறையூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-12 23:00 GMT
துறையூர்,

துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு மக்களுக்கு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், வார்டு மக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து தங்களது தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்து வந்தனர். இதனால், அவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். வார்டு பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி துறையூர்-பெரம்பலூர் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த துறையூர் நகராட்சி ஆணையர் பாப்பம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஆணையர், 15-வது வார்டு பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

அதனை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்