கிராமிய அஞ்சலகத்தில் ரூ.2¼ லட்சம் கையாடல் பெண் ஊழியர் கணவருடன் கைது

செய்யாறு அருகே கிராமிய அஞ்சலகத்தில் ரூ.2¼ லட்சம் கையாடல் செய்த ஊழியர் கணவருடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-11-13 22:15 GMT
செய்யாறு,

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பிரம்மதேசம் கிராமத்தில் கிராமிய அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கிராமிய அஞ்சலகத்தில் ஊழியராக ஆற்காடு தாலுகா வாழைப்பந்தல் கிராமத்தை சேர்ந்த நெசவு தொழிலாளி பாபு என்பவரின் மனைவி துர்கா (வயது 27) கடந்த 2012-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிராமிய அஞ்சலக சேமிப்பு கணக்கு, சேமிப்பு வைப்பு நிதி என பலவகையான அஞ்சலக திட்டங்களில் பணம் செலுத்தியுள்ளனர்.

ரூ.2¼ லட்சம் கையாடல்

கிராம மக்கள் செலுத்திய பணத்தினை முறையான ஆவணங்களில் பதிவு செய்யாமல் போலியாக அவர்களின் கணக்கு புத்தகத்தில் மட்டுமே பதிவு செய்துவிட்டு பணத்தினை கையாடல் செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் ராணிப்பேட்டை அஞ்சலக கண்காணிப்பாளர் மணிகண்டன் கிராமிய அஞ்சலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் அஞ்சலக ஊழியர் துர்கா ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 500 கையாடல் செய்தது தெரிய வந்தது.

2 பேர் கைது

மேலும் விசாரணையில் அஞ்சலக ஊழியர் துர்கா விடுமுறையில் இருக்கும்போது அவருக்கு பதிலாக அவரின் கணவர் பாபு அஞ்சலகத்திற்கு சென்று பணிகளை மேற்கொண்டுள்ளார். கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து பணத்தை கையாடல் செய்துள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்து அஞ்சலக கண்காணிப்பாளர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதி (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து துர்கா, அவரது கணவர் பாபு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் துர்கா மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்