நீதிமன்றம் மூலம் மீண்டும் இரட்டை இலை சின்னத்தை மீட்போம் டி.டி.வி. தினகரன் பேட்டி

நீதிமன்றம் மூலம் மீண்டும் இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று சித்தோட்டில் டி.டி.வி. தினகரன் கூறினார்.

Update: 2017-11-23 23:15 GMT

பவானி,

அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் இருந்து கோவை செல்லும் வழியில் நேற்று மாலை ஈரோடு மாவட்டம் பவானி வந்தார். பவானி அருகே சித்தோடு நால்ரோட்டுக்கு வருகை தந்த அவருக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தார்கள்.

பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்த ஆட்சி குரங்கின் கையில் கிடைத்த பூ மாலையாய் உள்ளது. அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என யாருக்கும் அதிகாரம் இல்லை. எல்லா அதிகாரமும் பொதுச்செயலாளருக்கே உண்டு.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன், செம்மலை ஆகியோர் மத்திய அரசுக்கு தலைவணங்கி உள்ளார்கள். மேலும் மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.

நீதிமன்றத்தின் மூலமும், தேர்தல் மூலமாகவும் மீண்டும் இரட்டை இலை சின்னத்தை மீட்போம். வருமான வரித்துறையின் எந்த வழக்கையும் சந்திக்க தயார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக பொதுச்செயலாளரிடம் கலந்து பேசி தேர்தலை சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்