சின்னாளபட்டி அருகே துணிகரம்: கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

சின்னாளபட்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். மேலும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டிலும் கைவரிசையை காட்டினர்.

Update: 2017-12-11 22:15 GMT
சின்னாளபட்டி,

சின்னாளபட்டி அருகே திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் போக்குவரத்து நகர் உள்ளது. இங்கு காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு பூஜை முடிந்து பூசாரி, கோவிலை பூட்டி விட்டு சென்றார். இந்தநிலையில் நள்ளிரவு வேளையில் கோவிலின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.

பின்னர் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர். நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கோவில் பூசாரிக்கு தகவல் கொடுத்தனர். கோவில் பூசாரி வந்து பார்த்தபோது, உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் கோவிலில் இருந்த ஒலி பெருக்கி உள்ளிட்டவற்றையும் தூக்கி சென்றனர்.

அம்பாத்துரை தனலட்சுமி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார். இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் வீட்டில் உள்ள பீரோ, அலமாரியில் நகை, பணம் எதுவும் இருக்கிறதா? என்று தேடியுள்ளனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த மர்மநபர்கள் வீட்டின் சுவரில் மாட்டியிருந்த எல்.இ.டி. டி.வி.யை திருடி சென்றனர். நேற்று வீட்டுக்கு வந்த ஆறுமுகம் வீட்டில் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னாளபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 2 சம்பவத்திலும் ஒரே கும்பலை சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

மேலும் செய்திகள்