ஆம்பூர் சீனிவாசபெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

ஆம்பூர் சீனிவாச பெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-12-13 00:18 GMT
ஆம்பூர்,

ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தில் பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. நகரின் மையப்பகுதியில் உள்ள இக்கோவிலில் புரட்டாசி மாதம் மற்றும் கிருத்திகை தினங்கள், வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷ நாட்களில் பூஜை நடைபெறும். மேலும் ஏராளமான திருமணங்கள் இந்த கோவிலில் நடந்துள்ளன. தினசரி பூஜைகள் நடந்து வருகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் அர்ச்சகர் பூஜையை முடித்து வழக்கம் போல கோவிலை பூட்டி சென்றார்.

உண்டியல் உடைப்பு

நேற்று காலையில் வந்து பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தையும், எல்.இ.டி. டி.வி. மற்றும் மின்சாதன பொருட்களையும் மர்மநபர்கள் திருடி சென்று இருந்தது தெரிய வந்தது.

கோவிலில் நுழைவு கோபுரம் அருகே உள்ள சிறிய இரும்பினால் ஆன கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே வந்து இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில் எழுத்தர் ரவி உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் செயல் அலுவலர் வடிவேல்துரை, ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் கோவிலுக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் இது குறித்து செயல் அலுவலர் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் உள்ள, நகரின் முக்கிய பகுதியில் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்