ஆலங்குளத்தில் குடும்ப தகராறில் பெண் தற்கொலை

ஆலங்குளத்தில் குடும்ப தகராறில், பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-12-30 21:00 GMT

ஆலங்குளம்,

ஆலங்குளத்தில் குடும்ப தகராறில், பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அடிக்கடி தகராறு

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகரை சேர்ந்தவர் அன்னராஜ் (வயது 39). கொத்தனாராக வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி மேரி தங்கம் (38). இவர்களுக்கு மிக்கேல்ராஜ், விமல்ராஜ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அன்னராஜ்க்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில் அன்னராஜின் மகன்கள் இருவரும் பள்ளி விடுமுறைக்காக கல்லூத்தில் உள்ள மேரி தங்கத்தின் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டனர். அன்னராஜூம், மேரி தங்கமும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

தூக்கு போட்டு சாவு

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் மீண்டும் கணவன்– மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த மேரி தங்கம், நள்ளிரவில் வீட்டில் உள்ள அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் எழுந்த அன்னராஜ், தன் மனைவி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேரி தங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்