கூட்டுறவு வங்கி காசாளர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

இரணியல் அருகே கூட்டுறவு வங்கி காசாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-12-30 23:15 GMT
அழகியமண்டபம்,

குமரி மாவட்டம் குழித்துறை ஹில் வார்டு பகுதியைச் சேர்ந்தவர் ரெகு (வயது 51). இவர் குழித்துறையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் கருமாவிளையில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அங்கு ஏற்கனவே மற்றொருவர் காசாளராக பணி செய்து வந்ததாகவும், அதனால் ரெகுவால் அங்கு வேலையில் சேர முடியவில்லை என்றும் தெரிகிறது. வீட்டில் இருந்து வந்த ரெகுவுக்கு உடல்நலக் குறைவும் ஏற்பட்டது.

இதையடுத்து ரெகு கடந்த சில நாட்களாக இரணியல் அருகே செட்டியார்மடத்தில் அவருடைய மாமனார் வீட்டில் தங்கி இருந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தற்கொலை செய்துகொண்ட ரெகுவின் உடலை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரெகுவின் தற்கொலைக்கான காரணம்என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கூட்டுறவு வங்கி காசாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்