மலாடில் மகளுடன் ஏற்பட்ட சண்டையில் பெண் தீக்குளிப்பு

மகளுடன் ஏற்பட்ட சண்டையில் பெண் தீக்குளித்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2017-12-31 22:38 GMT

மும்பை,

மும்பை மலாடு பகுதியை சேர்ந்தவர் வர்ஷா பவார் (வயது36). இவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்த சிறுமி தனக்கு விலை உயர்ந்த செல்போன் வாங்கி தரும்படி தாய் வர்ஷா பவாரிடம் நச்சரித்து வந்து இருக்கிறாள். ஆனால் அவளுக்கு செல்போன் வாங்கி கொடுக்க அவர் மறுத்து விட்டார்.

சம்பவத்தன்று இது தொடர்பாக தாய், மகள் இருவருக்கும் இடையே சண்டை உண்டானது. இதில் மனமுடைந்த வர்ஷா பவார் வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதில் அவர் உடல் முழுவதும் தீ பரவி எரிந்தது. இதனால் வேதனை தாங்க முடியாமல் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் வர்ஷா பவாரின் உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு 70 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மலாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்