மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதல்; மாணவர் பலி டிரைவருக்கு வலைவீச்சு

கண்ணமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-01-01 22:45 GMT
கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன் சுபாஷ் (வயது 16). இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை சுபாஷ் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் துருகம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார்.

வண்ணாங்குளம் பஸ் நிறுத்தம் அருகே செல்லும்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுபாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

டிரைவருக்கு வலைவீச்சு

இதுகுறித்து உதயகுமார் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப் - இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். அத்துடன் ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்