பூங்கா அமைக்கப்படும் இடங்கள் குறித்து ராமேசுவரத்தில் நகராட்சி முதன்மை செயலாளர் ஆய்வு

ராமேசுவரத்தில் நகராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட உள்ள இடங்களை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2018-01-15 23:00 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் நேற்று ராமேசுவரம் வந்தார். பின்னர் அவர் நகராட்சி சார்பில் ஓலைக்குடா கடற்கரை, சங்குமால் பூங்கா, அக்னி தீர்த்த கடற்கரை ஆகியவற்றில் பூங்கா அமைக்கப்பட உள்ள பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது கடற்கரையில் குப்பை கூளங்கள் கிடப்பதை பார்த்த அவர், கடற்கரையை தூய்மையாக பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது கலெக்டர் நடராஜன், நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், நகராட்சி பொறியாளர் வரதராஜன், துணை தாசில்தார் ஜப்பார் ஆகியோர் உடனிருந்தனர்.

கலெக்டர் நடராஜன் கூறும்போது, புண்ணிய தலமான ராமேசுவரத்துக்கு வரும் பக்தர்களுக்காகவும், சுற்றுலா பயணிகளுக்காகவும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் கூறும்போது, ராமேசுவரம் நகராட்சிக்கு ஆண்டு ஒன்றுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.1 கோடி மட்டுமே நகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது. இங்கு பணியாற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் மட்டுமே ரூ.2 கோடி ஆகிறது. நிதி பற்றாக்குறை ஏற்படுவதால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக வரி உயர்வு செய்யப்படவில்லை என்றார்.

முடிவில் ஹர்மந்தர்சிங், ராமேசுவரத்தில் உள்ள குருத்வாரா மடத்துக்கு சென்று குருநானக்கை வழிபட்டார். 

மேலும் செய்திகள்