அரவக்குறிச்சி அருகே லாரி மோதி 2 வாலிபர்கள் பலி

அரவக்குறிச்சி அருகே லாரி மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

Update: 2018-01-15 22:15 GMT
அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சி அருகே உள்ள தெத்துப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் குப்புசாமி மகன் குமார்(வயது 30). அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் முத்துராஜ்(27). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காலை அப்பகுதியில் திண்டுக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குமாரும், முத்துராஜும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீசார் விசாரணை

இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மராட்டிய மாநிலத்தில் இருந்து சர்க்கரை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி சென்ற லாரி வாலிபர்கள் மீது மோதியது தெரிந்தது. இதையடுத்து 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த சேகர்(42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்