மும்பை விமானநிலையத்தில் ரூ.1¾ கோடி வெளிநாட்டு பணத்துடன் 3 பேர் கைது ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

மும்பை விமான நிலையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரூ.1¾ கோடி வெளிநாட்டு பணத்துடன் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-01-15 22:19 GMT
மும்பை,

மும்பை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சம்பவத்தன்று காலை துபாய்க்கு விமானம் ஒன்று புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது, 3 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களது உடைமைகளை வாங்கி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அவர்கள் வைத்திருந்த உணவு பொட்டலங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்குள் கத்தை, கத்தையாக வெளிநாட்டு பணம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ரூ.1¾ கோடி வெளிநாட்டு பணம்

இதனையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் தானே மும்ரா பகுதியை சேர்ந்த மொகின் ஹனிப்சேக், அவரது தம்பி நிஜாமுதீன் மற்றும் உறவுக்கார பெண் அனம் சோயிப்சேக்(வயது24) என்பது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்