வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 56 பூனைகளை திருப்பி தர உத்தரவிடவேண்டும் ஐகோர்ட்டில், பெண் மனு தாக்கல்

வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 56 பூனைகளை திருப்பி தர உத்தரவிடவேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் பெண் ஒருவர் மனுதாக்கல் செய்து உள்ளார்.

Update: 2018-01-15 22:22 GMT
மும்பை, 

புனேயை சேர்ந்தவர் சங்கீதா(வயது42). ஆடை வடிவமைப்பாளர். இவர் புனே, கோந்த்வா ரோடு பகுதியில் கண் பார்வை இழந்த தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார். இவர் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் எனக்கு சொந்தமான வீட்டில் 56 பூனைகளை செல்லமாக வளர்த்து வந்தேன். இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி நள்ளிரவு விலங்கு நல ஆர்வலர்கள் என கூறிக்கொண்டு சிலர் போலீசாருடன் என் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அவர்கள் எனது வீட்டில் இருந்த பூனைகள் மற்றும் பீரோவில் இருந்த பணம், நகையை திருடி சென்றுவிட்டனர்.

பூனைகளை தரவேண்டும்

எனது வீட்டில் இருந்து பூனைகளை பறிமுதல் செய்தது சட்டவிரோதம். எனவே வீட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பூனைகளை என்னிடமே திருப்பி தர உத்தரவிடவேண்டும். மேலும் எனது வீட்டில் இருந்து பூனைகளை எடுத்து சென்றவர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. 

மேலும் செய்திகள்