குஜிலியம்பாறை அருகே உள்ள குளத்தில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை மனு

குஜிலியம்பாறை ஒன்றியம் கூம்பூர் ஊராட்சியில் 80 ஏக்கர் பரப்பளவில் பெரியகுளம் உள்ளது.

Update: 2018-01-15 22:32 GMT
திண்டுக்கல்,

குஜிலியம்பாறை ஒன்றியம் கூம்பூர் ஊராட்சியில் 80 ஏக்கர் பரப்பளவில் பெரியகுளம் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக குளத்திற்கு நீர்வரத்து ஏற்பட்டது. இந்நிலையில் தனிப்பட்ட சிலர் பெரியகுளத்தில் மீன் வளர்த்து தாங்களாகவே விற்பனை செய்து வருகின்றனர். தற்போது இந்த குளத்தின் அருகே கூரை அமைத்து அதில் தங்கியிருந்து காவல் காத்து வருகின்றனர்.

 இந்நிலையில் இந்த குளத்தில் கூம்பூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யாரேனும் மீன் பிடிக்க சென்றால் மீன் பிடிக்க விடாமல் அவர்களை விரட்டி அடிப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே கூம்பூர் ஊராட்சி பகுதி மக்களின் நலன் கருதி குஜிலியம்பாறை ஒன்றிய நிர்வாகத்துக்கு கட்டுப்பட்ட பெரியகுளத்தில் மீன் பிடிக்கும் உரிமையை டெண்டர் விடவோ அல்லது பொதுமக்கள் மீன் பிடித்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தன்னிச்சையாக மீன் பிடித்து கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினயிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்