குண்டாற்றில் சட்ட விரோதமாக மணல் எடுத்து விற்பதாக வழக்கு, விருதுநகர் கலெக்டருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

குண்டாற்றுப்பகுதியில் மணல் அள்ளி அதிக விலைக்கு விற்பதாக தொடரப்பட்ட வழக்கில் கலெக்டருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2018-01-17 22:00 GMT
மதுரை,

காரியாபட்டி அருகே சவடு மண் அள்ளுவதற்கான அனுமதியை வைத்து சட்ட விரோதமாக அதிக அளவில் குண்டாற்றுப்பகுதியில் மணல் அள்ளி அதிக விலைக்கு விற்பதாக தொடரப்பட்ட வழக்கில் கலெக்டருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது மணல் குவாரிகள் இல்லை. இதனால் மணல் தேவைக்காக விருதுநகர் மாவட்டத்திற்கு சென்றேன். அங்கு காரியாபட்டி அருகே உள்ள பாஞ்சார் கிராமத்தில் சவடு மண் எடுக்க பெற்ற அனுமதியை வைத்து, குண்டாற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளி விற்கின்றனர். வெளிமாநிலத்திற்கு அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் வெளிமாவட்டத்தினருக்கு மணல் தர மறுக்கின்றனர்.

ஆற்றின் கரைகளை சேதப்படுத்தி உள்ளனர். சட்டவிரோத மணல் குவாரியால் அரசுக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சவடு மண் அள்ள கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். குண்டாற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர், விருதுநகர் கலெக்டர், கனிமவளத்துறை உதவி இயக்குனர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதம்(பிப்ரவரி) 14-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். 

மேலும் செய்திகள்