கோவிலுக்கு மணி கட்ட அளவெடுக்க சென்ற போது பாத்திரக்கடை உரிமையாளர் 25 அடி உயரத்தில் இருந்து விழுந்து சாவு

கோவிலுக்கு மணி கட்ட அளவெடுக்க சென்ற போது, பாத்திரக்கடை உரிமையாளர் 25 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.

Update: 2018-01-17 21:45 GMT
ஈரோடு
சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் ரோட்டில் குளத்துப்பிரிவு என்ற இடத்தில் பழமையான பச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர் ஒருவர் பெரிய வெண்கல மணியை உபயமாக வழங்கினார். நேற்று முன்தினம் மாலை அந்த மணியை கோவிலில் எங்கு கட்டுவது என்று ஆலோசனை நடைபெற்றது. அதன்பின்னர் கோவிலின் ஒரு உயரமான கட்டிடத்தில் கட்ட முடிவானது.

அதன்படி மணியை கட்ட அளவெடுக்கும் பணியில் பவானியை சேர்ந்த பாத்திரக்கடை உரிமையாளர் ரங்கசாமி (வயது 62) என்பவர் சென்றார்.

கோவிலில் உள்ள ஒரு சிறிய கட்டிடத்தில் இருந்து மணி கட்ட வேண்டிய பெரிய கட்டிடத்துக்கு செல்ல இடையில் இரும்பு ஏணியை போட்டு அதில் ரங்கசாமி நடந்து சென்றார். அப்போது கால் இடறி சுமார் 25 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரங்கசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த ரங்கசாமிக்கு மகேஸ்வரி (52) என்ற மனைவியும், அருள்குமார் (30) என்ற மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்