திருவாலங்காட்டில் வாலிபர்கள் மீது போலீசார் தாக்குதல், பொதுமக்கள் சாலைமறியல்

திருவாலங்காட்டில் வாலிபர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-17 22:12 GMT
திருத்தணி,

திருவாலங்காடு, அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் திவாகரன் (வயது26). இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஜெகத்ரட்சகன் (28) என்பவருடன் அந்த பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர்கள் இருவரிடம் விசாரணை நடத்தினர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திவாகரனையும், ஜெகத்ரட்சகனையும் போலீசார் தரக்குறைவாக பேசி தாக்கி அனுப்பியதாக தெரிகிறது.

இது பற்றி அறிந்த அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அரக்கோணம்- திருவாலங்காடு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்