புதுச்சேரியில் ஊழல்கள் நடப்பது எப்படி? கவர்னர் கிரண்பெடி பட்டியலிட்டார்

புதுச்சேரியில் ஊழல்கள் எப்படியெல்லாம் நடக்கிறது என்று கவர்னர் கிரண்பெடி பட்டியலிட்டுள்ளார்.

Update: 2018-01-17 23:00 GMT
புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் கடந்த 18 மாதங்களாக நான் பணியாற்றியதில் கண்காணித்ததன் அடிப்படையில் ஊழல் எப்படி நடக்கிறது? என்று சில தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக தரம் குறைந்த பொருட்களை மிக அதிக விலை கொடுத்து வியாபாரி ஒருவரிடம் வாங்குவதில் இருந்து இது தொடங்குகிறது. பல நேரங்களில் இது கோடிக்கணக்கில் நடக்கிறது.

மேலும் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் தேவையில்லாததை கொள்முதல் செய்வது, குறிப்பாக பரிசுப் பொருட்கள் வழங்குவது, அனைவருக்கும் பணம் வழங்குவது ஆகியவையும் இதில் அடங்கும். அரசுப்பணத்தை நாம் தவறாக செலவிடக்கூடாது.

அரசுத்துறைகளில் அனுமதியில்லாமல் ஊழியர்கனை நியமிப்பதிலும் முறைகேடுகள் நடக்கிறது. இதற்காக அரசுத்துறை நிதி தேவையில்லாமல் செலவிடப்படுகிறது. அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக மற்ற தேவையான திட்டங்களுக்கான நிதி திருப்பி விடப்படுகிறது.

தங்களது வீடுகள் மற்றும் தங்களுக்காக சில பொருட்களை வாங்கிட உயர் அதிகாரிகள் இளம் அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவிடுவதன் மூலமும் ஊழல் நடக்கிறது. டெண்டர் விவகாரங்களில் ஒரு குறிப்பிட்ட வர்த்தகருக்கு சாதகமாக செயல்பட தொழில்நுட்ப காரணங்களை தவறாக கூறுவதிலும் நடக்கிறது.

விலை உயர்ந்த பொருட்களை அவரவர் தகுதிக்கு தகுந்தாற்போல் பரிசளிப்பதிலும் முறைகேடுகள் நடக்கிறது. சுயநலத்துக்காக சில தவறான ஆலோசனைகளை வழங்குவதால் அரசு மற்றும் தனிநபருக்கு இழப்பு ஏற்படுகிறது.

திட்டங்களுக்கு மிகைப்படியான செலவினங்களை அனுமதிப்பதிலும் முறைகேடு நடக்கிறது. விலைமதிப்பு மிக்க கட்டிடங்கள், மார்க்கெட்டுகள் கட்டப்பட்டு பல பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன. ஊழல்கள் நமது பணியை திறம்பட செய்யவிடாமல் தடுக்கின்றன.

நேர்மையான வழியில் செயல்படுவதே சிறந்தது. நாம் நமது உரிமையாளர், பணியாற்றும் அலுவலகத்துக்கு உண்மையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்