ஏரலில் சலூன் கடைக்குள் புகுந்து தலையாரிக்கு அரிவாள் வெட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஏரலில் பட்டப்பகலில் சலூன் கடைக்குள் புகுந்து தலையாரியை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-01-18 20:30 GMT
ஏரல்,

ஏரலில் பட்டப்பகலில் சலூன் கடைக்குள் புகுந்து தலையாரியை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தலையாரிக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை அடுத்த மங்களகுறிச்சியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து என்ற வள்ளி (வயது 55). இவர் அப்பகுதியில் கிராம நிர்வாக உதவியாளராக (தலையாரி) பணியாற்றி வருகிறார். இவருக்கு பத்மா என்ற மனைவியும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். லட்சுமிக்கு திருமணமாகி விட்டது.

இசக்கிமுத்து நேற்று மாலையில் முடி வெட்டுவதற்காக, ஏரலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் ஏரல் சினிமா தியேட்டர் எதிரில் உள்ள சலூன் கடையில் முடி வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சலூன் கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் அரிவாளால் இசக்கிமுத்துவை சரமாரியாக வெட்டினர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்தவாறு வெளியே ஓடினர். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து ஏரல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பலத்த காயம் அடைந்த இசக்கிமுத்துவை ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக ஏரல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலையாரியை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்