திருச்சி அருகே பயங்கரம் லாரி டிரைவர் வெட்டிக்கொலை 5 பேர் போலீசில் சரண்

திருச்சி அருகே லாரி டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் அரியமங்கலம் போலீசில் சரண் அடைந்தனர்.

Update: 2018-01-21 23:15 GMT
திருச்சி,

திருச்சி பாலக்கரை கீழப்புதூர் 5-வது தெருவை சேர்ந்தவர் வீரமலை. இவருடைய மகன் ஹேமந்த்குமார்(வயது 33). இவர் காந்தி மார்க்கெட்டில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியில் சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் அவர் அரியமங்கலம் உய்யகொண்டான் வாய்க்கல் கரையோரம் கழுத்து, மூக்கு உள்பட பல இடங்களில் வெட்டுக்காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹேமந்த்குமாரின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை திருச்சி வரகனேரியை சேர்ந்த ஜாகிர்உசேன், இவரது நண்பர்கள் சுரேஷ், ரமேஷ், பிச்சமுத்து, ஆனந்த் ஆகிய 5 பேர் நாங்கள் ஒருவரை கொலை செய்து விட்டோம் என்று கூறி நேற்று மாலை அரியமங்கலம் போலீசில் சரண் அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஹேமந்த்குமாரை கொலை செய்தவர்கள் அவர்கள் தானா? என்று அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்