ஆரோவில் உதயதின விழா: பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வருகிறார்

ஆரோவில் உதயதின விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வருகிறார்.

Update: 2018-02-02 23:45 GMT
புதுச்சேரி,

புதுவையை அடுத்த சர்வதேச நகரான ஆரோவில் உதய தின விழாவை இந்த மாத இறுதியில் கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த விழாவில் பிரதமர் கலந்துகொள்கிறார். இதையொட்டி இப்போதே அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் இணை செயலாளர் மற்றும் விழுப்புரம், புதுச்சேரி போலீசார் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த விழாவில் மட்டும் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. இதுதவிர புதுவையில் இருந்து கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்தை தொடங்கிவைக்கும் விழாவினை நடத்தவும் புதுவை அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாகத்தான் நேற்று முன்தினம் முதல்- அமைச்சர் நாராயணசாமி கவர்னர் கிரண்பெடியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. எனவே 24-ந்தேதி இருவிழாக்களும் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், பிரதமர் நரேந்திரமோடி புதுவை வர உள்ளதாக தகவல் வந்துள்ளதாகவும், அப்போது அவர் புதுவை நிகழ்ச்சிகள் எதிலும் பங்குகொள்வதாக தகவல் ஏதும் தங்களுக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்