கிண்டியில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கிண்டியில் ரோட்டில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

Update: 2018-02-02 22:20 GMT
ஆலந்தூர்,

சென்னை அடையாறு இந்திரா நகரை சேர்ந்தவர் தண்டயுதபாணி(வயது 69). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி தனலட்சுமியுடன் நேற்று சின்னமலையில் உள்ள பெட்ரோல் பங்கில் காருக்கு கியாஸ் நிரப்பி விட்டு சென்றார்.

சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சென்ற போது திடீரென காரில் இருந்து புகை வந்ததை கண்டதும் தண்டயுதபாணியும் அவரது மனைவியும் காரில் இருந்து இறங்கிவிட்டனர். சிறிது நேரத்தில் காரில் தீ மளமளவென எரிய தொடங்கியது. நடுரோட்டில் காரில் தீப்பிடித்து எரிந்ததை கண்டதும் சாலையில் சென்ற வாகனங்கள் நின்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கிண்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் கார் எரிந்துவிட்டது.

இது பற்றி கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்