சேலம் மாநகராட்சியில் 5,052 விண்ணப்பங்கள் வினியோகம்

சேலம் மாநகராட்சியில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தில் அரசின் மானியம் பெற இதுவரை 5 ஆயிரத்து 52 பேருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Update: 2018-02-02 22:28 GMT
சேலம்,

சேலம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக அரசின் உத்தரவின்படி, பணிக்கு செல்லும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் (ஸ்கூட்டர்) வழங்கும் திட்டத்தின் கீழ், 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டல அலுவலகங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 5-ந் தேதி மாலைக்குள் சமர்ப்பித்திட வேண்டும். சேலம் மாநகராட்சியில் இதுவரை சூரமங்கலம் மண்டலத்தில் 1,811, அஸ்தம்பட்டி மண்டலத்தில் 1,388, அம்மாபேட்டை மண்டலத்தில் 748, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 1,105 என மொத்தம் 5,052 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் விண்ணப்பதாரர்களின் நலன் கருதி, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக, இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் 4 மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு மையங்கள் அலுவலக நேரங்களில் செயல்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய காலத்திற்குள் வழங்கி, பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்