ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-02-08 03:01 GMT
ஊட்டி,

வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும், அரசு விடுமுறை நாட்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு காவல்துறையில் சம்பளம் வழங்குவதை போல் வழங்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் வினோத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ரவி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை பிரிவு அலுவலகத்துக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் பணிக்கு செல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டன. நீலகிரி மாவட்டம் முழுவதும் 220 வருவாய்த்துறை அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 16 பேர் மட்டுமே நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றனர். இன்றும் (வியாழக்கிழமை) வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். 

மேலும் செய்திகள்