மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உண்மைக்கு புறம்பான தகவல்: சி.பி.ஐ.விசாரணை கோரி வழக்கு தொடரப்படும் தந்தை செல்வமணி பேட்டி

டெல்லியில் மர்மமான முறையில் இறந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வந்துள்ளதால் சி.பி.ஐ. விசாரணை கோரி டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று திருப்பூர் அவரது தந்தை செல்வமணி கூறினார்.

Update: 2018-02-08 04:00 GMT
திருப்பூர்,

திருப்பூர்-மங்கலம் ரோடு பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (வயது 56). இவருடைய மகன் சரத்பிரபு (24). சரத்பிரபு எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்து விட்டு, டெல்லியில் உள்ள யூ.சி.எம்.எஸ். (யூனிவர்சிட்டி காலேஜ் ஆப் மெடிக்கல் சயின்ஸ்) என்ற மருத்துவக்கல்லூரியில் எம்.டி. (பொது மருத்துவம்) முதலாம் ஆண்டும் படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு அருகிலேயே அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி காலை சரத்பிரபு தனது அறையில் உள்ள கழிவறையில் தவறி விழுந்து விட்டதாகவும், அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் தந்தை செல்வமணிக்கு தகவல் வந்தது. திடீரென மர்மமான முறையில் சரத்பிரபு இறந்தது பெற்றோர், உறவினர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சரத்பிரபுவின் உடல் திருப்பூருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

ஆனால் சரத்பிரபுவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவருடைய நெற்றி மற்றும் கழுத்து பகுதியில் காயங்கள் இருப்பதால் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பெற்றோர், உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதில் உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள், கட்சியினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சரத்பிரபுவின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று டெல்லியில் இந்த வழக்கை நடத்தி வரும் வக்கீலிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவர் சரத்பிரபு மரணத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வந்துள்ளதாக தந்தை செல்வமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரேத பரிசோதனை அறிக்கை எங்கள் வக்கீலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் முழுவதும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வந்துள்ளது. இது மேலும், எங்களுக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. இறந்த சரத்பிரபுவின் அவருடைய உடலில் காயங்கள் இருந்தது பற்றி எந்த தகவல்களும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இதனால் இந்த அறிக்கை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்களுடன் ஆலோசனை செய்யப்படும். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையை அடிப்படையாக வைத்து சி.பி.ஐ. விசாரணை கோரி டெல்லியில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். விசாரணை நடத்த தமிழக அரசு, டெல்லி அரசுக்கு அழுத்தம் கொடுத்து இறப்புக்கான உண்மை நிலையை வெளியே கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்