கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்பனை; 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்க வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-02-08 04:46 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் போலீசார் ஆரம்பாக்கம் அடுத்த அரும்பாக்கம் சோதனைச்சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் துணிப்பையுடன் நடந்து வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில், ஒருவர் கும்மிடிப்பூண்டியை அடுத்த ராஜாபாளையத்தை சேர்ந்த சந்துரு (வயது 26) என்பதும், அவர் வைத்திருந்த துணிப்பையில் 31 மதுபாட்டில்கள் இருப்பதும் தெரியவந்தது.

அதே போல மற்றொருவர் பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் (45) என்பதும், அவர் வைத்திருந்த துணிப்பையில் 32 மதுபாட்டில்கள் இருப்பதும் தெரியவந்தது. போலீஸ் விசாரணையில், மேற்கண்ட மதுபாட்டில்களை அவர்கள் அந்த பகுதியில் லாரி டிரைவர்களிடம் திருட்டுத்தனமாக விற்பதற்காக எடுத்து வந்தது தெரியவந்தது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 63 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்