அரசு வழங்கிய பணத்தை முழுமையாக வழங்காத நிர்வாகத்தை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு வழங்கிய பணத்தை முழுமையாக வழங்காத நிர்வாகத்தை கண்டித்து தஞ்சையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-08 23:00 GMT
தஞ்சாவூர்,


தஞ்சை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மதுரை மண்டலத்தை சேர்ந்த வள்ளல் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 2017–ம் ஆண்டு வருடாந்திர ஊதிய உயர்விற்கு தமிழக அரசு வழங்கிய பணத்தை முழுமையாக, முறையாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தமிழக மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் தொழிலாளர்களின் சம்பளம், வாகன பராமரிப்பு என பல்வேறு வகையில் முறைகேடு செய்யும் நிறுவனத்தின் மீது நீதி விசாரணை அமைக்க வேண்டும்.


108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் தன்னிச்சையாக முடிவெடுத்து, தமிழக அரசு வழங்கிய பணத்தை முறையாக முழுமையாக தொழிலாளர்களுக்கு வழங்காமல் 6 சதவீதம் மட்டும் வழங்கி விட்டு தமிழக அரசிடம் 15 சதவீதம் வழங்கியதாக பொய்யான தகவல்களை பரப்பும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராஜேந்திரன், பிரேம், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்