தோழியிடம் நகை, பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டவரின் கணவர் கைது

திருவள்ளூர் அருகே தோழியிடம் நகை, பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டவரின் கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-02-08 21:45 GMT
திருவள்ளூர்.

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை ஜானகிராமன் நகரை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அருள்ஜோதி (வயது 46). அதே பகுதியை சேர்ந்தவர் லாவண்யா (29). இருவரும் தோழிகள். இந்த நிலையில் அருள்ஜோதியும் லாவண்யாவும் தேவைக்காக நகை மற்றும் பணத்தை கொடுக்கல் வாங்கல் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யா தனது தேவைக்காக அருள்ஜோதியிடம் பணம் மற்றும் நகை கேட்டுள்ளார். அதைத்தொடர்ந்து அருள்ஜோதி ரூ.14 லட்சம் மற்றும் 48 பவுன் தங்கநகையை லாவண்யாவிடம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட லாவண்யா குறிப்பிட்ட காலத்தில் கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லாவண்யா வேலைக்காக கனடா நாட்டுக்கு சென்று விட்டார். இதை அறிந்த அருள்ஜோதி, லாவண்யாவின் வீட்டுக்கு சென்று அவரது கணவர் சுரேஷ்குமாரிடம் (38) தனக்கு சேர வேண்டிய நகை, பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். சுரேஷ்குமார் பணம் மற்றும் நகை தர மறுப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து அருள்ஜோதி செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.  லாவண்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்