அருந்ததியர் சமுதாயத்தினருக்கு அடிப்படை வசதி வேண்டும்: கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

அருந்ததியர் சமுதாயத்தினர் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2018-02-19 22:15 GMT
விருதுநகர்,

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது கலெக்டரிடம் ஏராளமானோர் மனு கொடுத்தனர். சங்கரபாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்த அருந்ததியர் சமுதாயத்தினர் சார்பாக கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ள சங்கரபாண்டியபுரம் தெற்கு தெருவில் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த 80 குடும்பத்தினர் கூட்டுக்குடும்பங்களாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி கோரி பல முறை பஞ்சாயத்து நிர்வாகத்திடமும், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை.

நாங்கள் பயன்படுத்தும் மயானத்துக்கு பாதை அமைத்து தர வேண்டும். நாங்கள் குடியிருக்கும் தெற்கு தெருவிற்கு பாதை ஏதும் இல்லை. இதனால் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். மேலும் எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. மின் விளக்குகள் இல்லாததால் இருட்டில் வசித்து வரும் நிலை உள்ளது. எனவே எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கட்டனார்பட்டி பஞ்சாயத்தில் உள்ள ஆதிப்பட்டி கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், தங்கள் கிராமத்தில் 40 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த பட்டா நிலம் ஒரே சர்வே எண்ணில் உள்ள நிலையில் அதனை எங்களுக்கு தனித்தனியாக பிரித்து வழங்காத நிலை உள்ளதாகவும், எனவே அனைவருக்கும் தனித்தனியாக பட்டா வழங்க வேண்டும் என கோரி உள்ளனர். 

மேலும் செய்திகள்