திருப்பதி லட்டுக்கு ஏலக்காய் சப்ளை செய்வதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி

திருப்பதி லட்டு செய்வதற்கு ஏலக்காய் சப்ளை செய்வதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி செய்த என்ஜினீயர், தாயாருடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-02-19 23:00 GMT
சென்னை,

சென்னை அண்ணாநகர் மேற்கு, பாடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விசாலாட்சி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

எனது மகனுடன் ஒன்றாக என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த ஆலிலைவேந்தன் என்பவர் எங்கள் குடும்ப நண்பர். அவருடைய தாயார் தெய்வஜோதி ஒரு புது தொழிலை தொடங்கப்போவதாக சொன்னார். திருப்பதி லட்டு செய்வதற்கு ஏலக்காய் சப்ளை செய்யும் காண்டிராக்டை எடுத்துள்ளதாகவும், இதில் நல்ல லாபம் கிடைக்கும் என்றும், இதற்காக ரூ.60 லட்சம் தேவைப்படுவதாகவும், அந்த பணத்தை முதலீடு செய்யும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னதை நம்பி, நகைகளை விற்றும், நண்பர்களிடம் கடனாக பெற்றும் ரூ.60 லட்சம் முதலீடு செய்தோம்.

ஆனால் அந்த பணத்தை ஏமாற்றி தெய்வஜோதியும், அவரது மகன் ஆலிலைவேந்தனும் மோசடி செய்துவிட்டனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை வசூலித்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

தெய்வஜோதியும், அவரது மகன் என்ஜினீயர் ஆலிலைவேந்தனும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மோசடி பணத்தில் ரூ.20 லட்சத்தை உடனடியாக திருப்பிக்கொடுப்பதாக கோர்ட்டில் உத்தரவாதம் கொடுத்து ஜாமீனில் வெளிவந்தனர்.

ஆனால் கோர்ட்டில் சொன்னபடி நடக்காமல் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதனால் அவர்கள் இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்கண்ட தகவலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்