என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி திடீர் சாவு: உடலை வாங்க மறுத்து 5-வது நாளாக உறவினர்கள் போராட்டம்

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி பணியின் போது திடீரென இறந்தார். இதையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து 5-வது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2018-02-19 22:30 GMT
வடலூர்,

வடலூர் அருகே உள்ள காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 48). என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி. சம்பவத்தன்று இவர், பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரின் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே மர்மமான முறையில் பணியின்போது இறந்ததால் அதிர்ச்சியடைந்த ஜெயக்குமாரின் உறவினர்கள் மற்றும் காட்டுக்கொல்லை கிராம மக்கள், ஜெயக்குமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். ஆனால் இவர்கள் கோரிக்கை குறித்து என்.எல்.சி. நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.

இதையடுத்து கடந்த 15-ந் தேதி முதல் இறந்த ஜெயக்குமாரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டத்துக்கு பா.ம.க.வினர் ஆதரவு தெரிவித்து, அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்களது போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது. இந்த போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக தி.மு.க., பா.ம.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று காலை 10.10 மணிக்கு வடலூர் நான்கு முனை சந்திப்பு சாலையில் பல்வேறு கட்சியினர் ஒன்று திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் சிவக்குமார், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைகண்ணன், மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், அ.தி.மு.க. ஆறுமுகம், காங்கிரஸ் நகர தலைவர் சக்கரையாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மறியலின் போது, ஜெயக்குமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்க வேண்டும், அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பினர்.

இது பற்றி தகவல் அறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையிலான வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கடலூர் சப்-கலெக்டர் தலைமையில் பேசி சுமூக தீர்வு காணலாம் என்று போலீசார் கூறினர். இதை ஏற்ற அரசியல் கட்சியினர் காலை 10.50 மணிக்கு மறியலை கைவிட்டனர். இதனால் 40 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், அரசியல் கட்சியினர் நடத்திய மறியல் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கடலூரில் சப்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில், பணியின் போது இறந்த ஜெயக்குமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர ஒப்பந்த பணி வழங்கப்படும், இழப்பீடு தொகையும் வழங்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அரசியல் கட்சியினரும், ஜெயக்குமாரின் உறவினர்களும் ஏற்றுக் கொண்டு, உடலை வாங்க ஒப்புக் கொண்டனர்.

5 நாட்களாக நடந்து வந்த போராட்டம் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவுக்கு வந்தது. 

மேலும் செய்திகள்