இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை

‘பேஸ்புக்’கில் அறிமுகமானவரை சந்திக்கச்சென்ற இளம்பெண் பாலியல் உறவுக்கு மறுத்ததால் வாலிபரால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-02-19 23:30 GMT
வசாய்,

பால்கர் மாவட்டம், நாலச்சோப்ரா கிழக்கு அல்காபுரி பகுதியில் தானியா மோன்ஆர்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மயங்கிய நிலையில் இளம்பெண் ஒருவர் கிடந்தார். இது குறித்து குடியிருப்புவாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு சென்று இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அப்போது இளம்பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் கூறினர். மேலும் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த கட்டிடத்தில் வசித்து வரும் ஹரிதாஸ்(வயது25) என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, உறவுக்கு மறுத்ததால் ஆத்திரமடைந்து அவர் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:-

ஹரிதாஸ் தனது சகோதரியுடன் அந்த கட்டிடத்தின் தரை தளத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ‘பேஸ்புக்’ மூலம் வாஷி பகுதியை சேர்ந்த அங்கிதா(20) என்ற இளம்பெண் அறிமுகம் ஆகியுள்ளார். 2 பேரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று அங்கிதா, ஹரிதாசை சந்திக்க நாலச்சோப்ராவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஹரிதாஸ், அங்கிதாவுடன் பாலியல் உறவு கொள்ள முயற்சி செய்துள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். மேலும் வீட்டில் இருந்து வெளியேறவும் முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிதாஸ், அங்கிதாவின் கழுத்தை ‘ஷூ’ லேசால் நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தி அங்கிதாவின் செல்போன், பணப்பை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த துலிஞ் போலீசார், ஹரிதாசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்