பெண்ணிடம் செல்போன் பறித்தவர்கள்

சென்னை எம்.கே.பி.நகர் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். செல்போனை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பியபோது, விபத்தில் சிக்கிய அவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2018-02-23 23:30 GMT
பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடியை அடுத்த எம்.கே.பி. நகர் 14-வது தெருவைச்சேர்ந்தவர் மகிமைதாஸ். மின்சார வாரிய ஊழியர். இவருடைய மனைவி ஆரோக்கியமேரி. இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள 11-வது தெருவில் தனியாக நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஆரோக்கியமேரியிடம் இருந்த செல்போன் மற்றும் மணிபர்சை பறித்துச்சென்றனர். இதில் அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியமேரி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், மர்மநபர்களை துரத்திச் சென்றனர்.

இதனால் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். அப்போது சாலையின் குறுக்கே வந்த ஆட்டோவில் அவர்களது மோட்டார் சைக்கிள் எதிர்பாராமல் மோதி கீழே விழுந்தனர். அவர்களை விரட்டி வந்த பொதுமக்கள் 2 பேரையும் மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

பின்னர் அவர்களை எம்.கே.பி. நகர் போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர்கள் சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த பூபதி(வயது 21), கொடுங்கையூர் எழில் நகரைச்சேர்ந்த ராஜா என்ற ராஜேஷ்(21) என்பது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ஆரோக்கியமேரியிடம் இருந்து பறித்த செல்போன், மணிபர்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்