அக்காள், தங்கையை காதலித்து புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றப்போவதாக மிரட்டிய என்ஜினீயர் கைது

அக்காள், தங்கையை காதலித்து, நெருக்கமாக இருந்த புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றப்போவதாக மிரட்டிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-25 22:15 GMT
பொன்மலைப்பட்டி,

திருச்சி அரியமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லூர்துசேவியர். இவருடைய மகன் லியோ பிரான்சிஸ்(வயது 22). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்ததாக தெரிகிறது. இவருக்கும், அரியமங்கலம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பெண்ணுக்கும், பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. அந்த பெண் ஒரு மருத்துவ மனையில் பணிபுரிந்து வருகிறார். லியோ பிரான்சிசும், அந்த பெண்ணும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். 2 ஆண்டுகளாக அவர்கள் காதலித்த நிலையில், திடீரென்று அந்த பெண்ணுக்கு வேறு சிலருடன் தொடர்பு இருப்பதாக கூறி, லியோ பிரான்சிஸ் அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் அந்த பெண்ணும் பிரான்சிசிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு பின்னர் அந்த பெண்ணின் அக்காளுடன், லியோ பிரான்சிசுக்கு பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அவர்கள் காதலித்து வந்தனர். அப்போது இருவரும் கல்லணை, முக்கொம்பு உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றி திரிந்துள்ளனர். அப்போது லியோ பிரான்சிஸ், அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை செல்போனில் விதவிதமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

அதில் சில படங்கள் மற்றும் வீடியோவை அந்த பெண்ணின் தங்கையும், தனது முதல் காதலியின் செல்போனுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி உள்ளார். பின்னர் அந்த பெண்ணுக்கு போன் செய்து, அந்த படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றி விடுவேன் என்றும், உனக்கும், உன் அக்காவுக்கும் யாருடனும் திருமணம் நடக்க விட மாட்டேன், என்றும் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன அந்த பெண், நடந்த சம்பவம் பற்றி தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், அந்த பெண்ணின் அக்காள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லியோ பிரான்சிசை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்