கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும் பா.ஜனதா மாநாட்டில் அமித்ஷா பேச்சு

பா.ஜனதா தொண்டர்கள் மாநாட்டில் அமித்ஷா பேசினார்.

Update: 2018-02-25 23:42 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும் என்று அமித்ஷா பேசினார்.

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஐதராபாத்-கர்நாடகத்தில் எல்லைப்பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று யாதகிரியில் நடைபெற்ற பா.ஜனதா தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியதாவது:-

முதல்-மந்திரி சித்தராமையா கர்நாடகத்தில் ஊழல் ஆட்சியை நடத்தி வருகிறார். நாட்டிலேயே ஊழலில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. விவசாயிகளின் மேம்பாட்டிற்கு காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளை கண்டுகொள்ளாததால் அவர்கள் கடும் கஷ்டத்தில் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள இந்த ஊழல் காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும். மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. ஆனால் அந்த திட்டங்களை கர்நாடகத்தில் அமல்படுத்தாமல் சித்தராமையா தடுத்துவிட்டார். சித்தராமையாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

கர்நாடகத்தில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சி, நிஜாம்களின் ஆட்சி நிர்வாகத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. அந்த அளவுக்கு காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் மாநிலத்தை முன்னேற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதனால் வருகிற தேர்தலில் கர்நாடக மக்கள் பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இந்த மாநாட்டில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்