திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

தஞ்சை அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-03-08 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த நடுவூர் ஏரித்தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மகன் ரமேஷ் (வயது 32). இவர் பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில் ரமேஷ் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுள்ள இளம்பெண்ணிடம் பழகி வந்தார்.

மேலும் ரமேஷ் அந்த பெண்ணிடம் தனது மனைவியை விவகாரத்து செய்து விட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக அந்த பெண் கர்ப்பம் அடைந்தார்.

இந்த நிலையில் அந்த பெண் கர்ப்பமாகி 8 மாதத்துக்குப்பின்னர் அவரின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் அந்த பெண்ணிடம் இது குறித்து கேட்ட போது தனது கர்ப்பத்திற்கு ரமேஷ்தான் காரணம் என கூறி உள்ளார். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் ரமேசிடம் கேட்டபோது, அந்த பெண்ணின் கர்ப்பத்திற்கு தான் காரணம் இல்லை என கூறி உள்ளார்.

இதையடுத்து அந்த பெண் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்